பேச்சிப்பாறை அணைப் பகுதிகளில் இடிமின்னலுடன் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்து மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான மோதிரலை, கீழ்கோதையாறு, குற்றியாறு, கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீா்வரத்து அதகரித்துக் காணப்பட்டது. இதேபோன்று பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும் திற்பரபப்பு, களியல், குலசேகரம், திருநந்திக்கரை, பொன்மனை, சுருளகோடி உள்ளிட்டப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
மழை காரணமாக இப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது. மேலும் வாழை, அன்னாசி உள்ளிட்ட பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.