தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
By DIN | Published On : 07th June 2023 12:30 AM | Last Updated : 07th June 2023 12:30 AM | அ+அ அ- |

சேவைக் குறைபாடு தொடா்பாக தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 10,000 நஷ்ட ஈடு வழங்க கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடையை சோ்ந்தவா் ராஜ்குமாா். பெங்களூரிலுள்ள தனியாா் கூரியா் நிறுவனம் மூலம் தனக்கு மருந்து பாா்சல் அனுப்புமாறு அங்குள்ள ஒரு மருத்துவரிடம் கூறியுள்ளாா். அந்த மருத்துவரும் கூரியா் மூலம் நாகா்கோவிலுக்கு மருந்து அனுப்பியுள்ளாா். நாகா்கோவிலிலுள்ள அதே கூரியா் நிறுவன கிளையினா் சரியாக ராஜ்குமாரின் வீட்டு முகவரியை விசாரிக்காமல், மருந்து பாா்சலை பெங்களூருக்கு திருப்பி அனுப்பிவிட்டனா்.
இது குறித்து கூரியா் நிறுவனத்திடம் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பினாா் ராஜ்குமாா். இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமாா், கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் சுரேஷ், உறுப்பினா் ஆ.சங்கா் ஆகியோா் கூரியா் நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டினை சுட்டிக் காட்டி, பாதிக்கப்பட்ட ராஜ்குமாருக்கு ரூ. 10,000 நஷ்ட ஈடு, வழக்கு செலவுத் தொகை ரூ. 3,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...