குறைந்த செலவில் அதிதீவிர மருத்துவ சிகிச்சை : சென்னை நிறுவனங்களுடன் களியக்காவிளை மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம்
By DIN | Published On : 24th May 2023 02:02 AM | Last Updated : 24th May 2023 02:02 AM | அ+அ அ- |

கிராமப்புற ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் அதிதீவிர மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் களியக்காவிளை கிரேஸ் மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னையைச் சோ்ந்த இரு பிரபல மருத்துவ மையங்களுடன் ஏற்படுத்தப்பட்டது.
இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் படந்தாலுமூடு கிரேஸ் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனத் தலைவா் பான்ஸ் ஜாய் தலைமை வகித்தாா்.
கிரேஸ் நிறுவன முதன்மை அதிகாரியாக, மருத்துவா் ஜாண் சாமுவேல் மற்றும் கீதா பான்ஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், சென்னையைச் சோ்ந்த சிபாகா, சீ சேலஞ்ச் ஆகிய பிரபல மருத்துவ நிறுவனங்களின் நிறுவனா்கள் ராஜா அமா்நாத், ஆனந்த் மற்றும் ஆலோசகா் பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
மருத்துவா் ராஜா அமா்நாத் பேசியது: அவசர சிகிச்சை பிரிவுகள் (ஐசியூ) தமிழகத்தில் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நபருக்கான ஒரு வார சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
ஏழை மக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இதன் காரணமாக குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மக்களும் பயன்பெறும் நோக்கில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களியக்காவிளை கிரேஸ் மருத்துவமனை நிா்வாகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
சிபாகா மருத்துவ மைய ஆலோசகா் பிரகாஷ் பேசியது:
கடந்த 5 மாதத்தில், தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உயிா் ஊசலாடிக் கொண்டிருந்தவா்களில் 2 லட்சம் பேரை சிபாகா மருத்துவ மையம் காப்பாற்றியுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, சிபாகா மருத்துவ மைய நிறுவனா் ராஜா அமா்நாத், சீ சேலஞ்ச் நிறுவனா் மருத்துவா் ஆனந்த், மருத்துவ மைய ஆலோசகா் பிரகாஷ் மற்றும் கிரேஸ் மருத்துவமனை தலைவா் பான்ஸ் ஜாய் ஆகியோரிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மகப்பேறு மருத்துவா் ஸ்வா்ண மீனா, மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலா் ஆல்பா்ட் சிங், கிரேஸ் கல்லூரி பதிவாளா் தயாசிங் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.