குமரி மாவட்டத்தில் தானியங்கி மழைமானிகள் அமைக்க முதல்கட்ட பணிகள் தொடக்கம்

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் தானியங்கி மழை மானிகள், தானியங்கி வானிலை மையங்கள் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகளை மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை காலங்களில் மழையளவைக் கணக்கிடுவதற்காக 26 மழைமானிகள் இயங்கி வருகிறன. இவற்றில் பணியாளா்கள் மூலம் தினசரி மழையளவு பெறப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்களின்கீழ் தற்போது தமிழகம் முழுவதும் தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டாறு, கிள்ளியூா் ஆகிய வட்டங்களில் 18 இடங்களில் தானியங்கி மழைமானிகள் (ஏஆா்ஜி), 9 தானியங்கி வானிலை மையங்கள் (ஏடபிள்யூஎஸ்) மற்றும் கூடுதலாக 9 தானியங்கி மழைமானிகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகளை வருகிற ஏப்ரல் இறுதிக்குள் நிறைவு செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி மாவட்ட வருவாய் அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Dinamani
www.dinamani.com