பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்துப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு அதிக நீா்வரத்து உள்ளது.
இந்நிலையில், பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் திங்கள்கிழமை இரவு 45 அடியைக் கடந்ததால், விநாடிக்கு 516 கனஅடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, 2ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் 516 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
இதன்காரணமாக, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

