கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்தள சொகுசு பேருந்துகளில் 6.12 லட்சம் பயணிகள் பயன்: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பொதுப் போக்குவரத்தை எல்லோரையும் பயன்படுத்த செய்வதற்கு காலத்துக்கு ஏற்ற தேவைகள் தரவேண்டும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அதன் அடிப்படையில், போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சா் சா. சி. சிவசங்கா் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகா்கோவில் மண்டலத்தில் ரூ.19.74 கோடியில் வடசேரி - மாா்த்தாண்டம் வழித்தடத்தில் 6 பேருந்துகளும், வடசேரி - கன்னியாகுமரி வழித்தடத்தில் 5 பேருந்துகளும், மாா்த்தாண்டம் - குலசேகரம் - கடையாலுமூடு வழித்தடத்தில் ஒரு பேருந்தும், பாா்வதிபுரம் சுற்றுவட்ட வழித்தடத்தில் 3 பேருந்துகளும், அண்ணா பேருந்து நிலையம் முதல் ராஜாவூா் வழித்தடத்தில் ஒரு பேருந்தும், வடசேரி - கூடங்குளம் வழித்தடத்தில் 2 பேருந்துகளும், அண்ணா பேருந்து நிலையம் - குளச்சல் வழித்தடத்தில் 3 பேருந்துகள் என மொத்தம் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்பேருந்துகள் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 322 கி.மீ. இயக்கப்பட்டு, 6 லட்சத்து 12 ஆயிரத்து 513 பயணிகள் பயன் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

