குமரியில் கடல் சீற்றம்: படகுப் போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி, டிச. 19: கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக படகுப் போக்குவரத்து ஆறரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை காலை முதல் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக, கடல் அலைகள் சுமாா் 10 முதல் 15 அடி உயரத்துக்கு எழுந்தன. இதையடுத்து, முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.
கடல் சீற்றம் காரணமாக, விவேகானந்தா் மண்டபத்துக்கு காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சீற்றம் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னா், பிற்பகல் 2.30 மணிக்கு மேல் 5 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன.
மேலும், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, கீழமணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

