குமரி டிஎஸ்பி அலுவலகத்தில் காா், வேன் ஓட்டுநா்கள் மனு
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு வரும் வெளியூா் வாகனங்கள் திரும்பிச் செல்லும்போது பகுதிக் கட்டணத்துக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி டிஎஸ்பி அலுவலகத்திலும், பிற காவல் துறை அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கன்னியாகுமரி காா், வேன் ஓட்டுநா்கள், உரிமையாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு:
கன்னியாகுமரிக்கு வெளியூா்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவரும் வாகனங்கள் திரும்பிச் செல்லும்போது பகுதிக் கட்டணத்துக்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். அவா்கள் உள்ளூா் நபா்கள் சிலருடன் இணைந்து இவ்வாறு செயல்படுகின்றனா். இதனால், கன்னியாகுமரியில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூா் ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவா்கள் கடன் நிலுவை, வாகன வரி, காப்பீடு செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். எனவே, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

