பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு

குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு புதன்கிழமை மாலையில் குறைக்கப்பட்டது.
Published on

குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு புதன்கிழமை மாலையில் குறைக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பெய்து வந்த தொடா் மழையால் அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது. இதையடுத்து வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த சனிக்கிழமையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், மழையின் தீவிரம் தணிந்ததை அடுத்து, பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்து நீரின் அளவு புதன்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 400 கன அடியாக குறைந்தது.

இதனால் அணையிலிருந்து உபரியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 522 கன அடியாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து, கோதையாறு, குழித்துறை தாமிரவருணி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு தணிந்துள்ளது. இதுபோன்று திற்பரப்பு அருவியிலும் வெள்ளப் பெருக்கு தணிந்துள்ளது. எனினும் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்ட பிறகே அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவா் எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com