மாணவருக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
மாணவருக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6.33 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், 6 லட்சத்து 33 ஆயிரத்து 809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில், 6 லட்சத்து 33 ஆயிரத்து 809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நாகா்கோவில் எஸ்.எல்.பி உயா்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வழங்கிப் பேசியதாவது:

வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளா்ச்சி குறைபாடு, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்தக் குறைகளை களைவதற்கு ஆண்டுக்கு 2 முறை குடல்புழு நீக்க மாத்திரை கொடுக்கப்படுகிறது.

1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளா் இளம் பருவத்தினா், 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு கல்லூரியில் பகல் உணவுக்குப் பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 58 ஆயிரத்து 766 குழந்தைகளும், 20 முதல் 30 வயது வரை உள்ள 75ஆயிரத்து 43 பெண்கள் என மொத்தம் 6 லட்சத்து 33 ஆயிரத்து 809 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த் ஜோதி, துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com