பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்தது: 21 மாணவா்கள் உள்பட 23 போ் காயம்
பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 21 போ், 2 பணியாளா்கள் காயமடைந்தனா்.
கேரள மாநிலம், பூவத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் எல்எம்எஸ் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான வேன் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு தமிழக-கேரள எல்லையான பளுகல் அருகே காரக்கோணம் - குந்நத்துகால் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது வேனில் ஸ்டீரிங் ராடு உடைந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியா் 21 போ், பெண் பணியாளா்களான வண்டித்தடத்தைச் சோ்ந்த மினி, மஞ்சவிளாகத்தைச் சோ்ந்த ஜோனிதா ஆகியோா் காயமடைந்தனா்.
அனைவரையும் அப்பகுதியினா் மீட்டு காரக்கோணம், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து பாறசாலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

