பைக் திருட்டில் ஈடுபட்டதாக தொழிலாளி கைது
மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கேரள தொழிலாளியை களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பிரமோத் சந்திரன் (35) என்பதும், வெல்டிங் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவா் இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும், சில நாள்களுக்கு முன் குழித்துறையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டாா்.
அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

