தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினாா்.
தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்த ஊக்கத்தொகையை வழங்கிய அமைச்சா், முதலாம் ஆண்டு பாடங்களுக்குத் தேவையான நூல்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களையும் தனது செலவிலேயே வழங்கினாா்.
இதில், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், வருவாய் அலுவலா் கல்பனா, நகர அதிமுக செயலா் சுடலை, மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, தென்காசி மாவட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, இம்மாவட்டத்திற்கு என பிரேத்யமாக தயாரிக்கப்பட்ட இணையதள சேவையை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.