ஆலங்குளம் அருகே விஷம் அருந்திய கணவன் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் இன்று உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி(65). விவசாயியான இவரது மனைவி மாரியம்மாள்(60). தம்பதி அஜித்குமார்(27) என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். அஜித்குமார் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தாராம்.
இதையும் படிக்க- ஐபிஎல் 2021 போட்டியின் சிறந்த ஆல்ரவுண்டர் யார்?
இது குறித்து பெற்றோர் அறிவுறை கூறியும் அவர் கேட்பதில்லையாம். இந்நிலையில் அஜித்குமார் புதன்கிழமை விலை உயர்ந்த செல்லிடப் பேசி கேட்டு தகராறில் ஈடுபட்டாராம். இதில் மனமுடைந்த தம்பதி இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான தோட்டத்திற்குச் சென்று பூச்சி மருந்தை அருந்தினராம். இதில் ராமசாமி உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியம்மாள் இருந்துள்ளார். இவை குறித்து வியாழக்கிழமை தெரிய வந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற பாப்பாக்குடி போலீஸார் மாரியம்மாளை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.
பாப்பாக்குடி போலீஸார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.