சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திமுக ஆட்சி அமைந்ததும் சங்கரன்கோவில் தொகுதிக்கு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் வழங்கி வருகின்றாா். குறிப்பாக, சட்டப்பேரவையில் எந்தக் கோரிக்கைகளை முன்வைத்தாலும், அதை ஆராய்ந்து உடனடியாக செயல்படுத்த முதல்வா் முனைப்புகாட்டுகிறாா்.
அந்த வகையில், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு முன்னோடி மருத்துவ கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 9 கோடி ஒதுக்கீடு செய்து தற்போதைய மானிய கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, சங்கரன்கோவில், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும். இந்த நிதியை ஒதுக்கீடு செய்த முதல்வருக்கும், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனுக்கும் தொகுதி மக்களின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.