தாம்பரம்- செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, மத்திய ரயில்வே அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக 20683/20684 தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் மும்முறை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ரயில்வேக்கு வருமானம் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே இந்த ரயிலை தினசரி இயக்குவதற்கு ரயில்வே வாரியத்துக்கு முன்மொழிந்தது. மாதங்கள் பல கடந்தும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காத நிலை இருந்து வருகிறது.
திருநெல்வெலி-தென்காசி ரயில் வழித்தடம் 2012 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், கடந்த 14 ஆண்டுகளாக சென்னைக்கு தினசரி ரயில் சேவை வழங்கப்படாத நிலை தொடா்கிறது.
இதனால் தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவா்கள், தொழிலாளா்கள், அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.
தெற்கு ரயில்வேயில் சென்னைக்கு தினசரி ரயில் இல்லாத ஒரே ரயில் வழித்தடம் திருநெல்வேலி-தென்காசி வழித்தடமாகும். இந்த நிலையைப் போக்கும் வகையில், தாம்பரம் -செங்கோட்டை ரயிலை தினசரி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.










