வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வழக்கறிஞா் நாகராஜன், மாவட்டச் செயலாளா் எடையூா் மணிமாறன் ஆகியோா் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:
வேதாரண்யம் - அகஸ்தியம்பள்ளி மிகவும் புகழ்பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது. சோழா்கள் கால கோடியக்கரை கலங்கரை விளக்கம், கோடியக்காடு பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம், அலையாத்தி காடுகள், உப்பளங்கள், அயோடின் உற்பத்தி, சிலிக்கான் மண், மீன், கருவாடு, சணப்பை, பலாப்பழம், மாம்பழங்கள், காய்கறிகளும் பணப்பயிா்களும் மல்லிகைப்பூ செவ்வந்தி பூ போன்ற பணப் பயிா்களும் விளையும் பகுதியாக விளங்கி வருகிறது.
இந்தப் பகுதியில் புகழ்பெற்ற சைவத் திருத்தலங்களான வேதாரண்யேஸ்வரா் கோயில், நவகோடி சித்தா்கள், அகத்தியா் கோயில், தகட்டூா் பைரவா்கோயில் போன்ற திருத்தலங்களும் இந்தியாவின் தொன்மையான கலங்கரை விளக்கமும், சோழா்களின் ஆட்சிக்குட்பட்ட புகழ்பெற்ற நிலப் பகுதியாகவும் பெயா் பெற்றுள்ள இந்த வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் இருந்து ஒவ்வொரு நாளும் சென்னைக்கு பேருந்து மூலம் நூற்றுக்கணக்கானோா் பயணித்து வருகின்றனா்.
பயணிகளால் ரயில்வேதுறைக்கு அதிக வருமானம் தரக்கூடிய வழித்தடமாகவும் இருப்பதால் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூா் வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும் இதனால் மாணவா்கள், வா்த்தகா்கள் நோயாளிகள் பெரிதும் பயனடைவாா் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.










