தென்காசி, குற்றாலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் குழந்தைகளைக் கடத்தி வைத்தும், பள்ளிக்கு அனுப்பாமலும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தனவாம். இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ்ஆனந்த் தலைமையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு ஆய்வாளர் பிலோமினா, தேசிய குழந்தைகள் திட்ட மேலாளர் விஸ்வநாதன், சைல்டு லைன் -1098 உறுப்பினர் ராபர்ட் நெல்சன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயசீலன், ஆற்றுப்படுத்துநர்கள் பாலமுருகன், பரிமளா, தொழிலாளர் நலத்துறை உதவியாளர் வேல்மாரியப்பன் மற்றும் காவல்துறையினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். குற்றாலம் பேரருவி பகுதி, பூங்கா, கோயில் வளாகம், தென்காசி ரயில் நிலையம் மற்றும் எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் இந்த ஆய்வு நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கூறியது: பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை என்பதால் பெற்றோர்களே தங்களுடைய குழந்தைகளை பிச்சை எடுப்பதற்கு அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த குழந்தைகள் அவர்களுடயவைதானா என விசாரிக்கப்படும். உரிய ஆவணங்களின்றி குழந்தைகள் வைத்திருப்பது தெரியவந்தால் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குழந்தை கடத்தல் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.