திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், கடையம் பகுதிகளில் புதன்கிழமை இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் அச்சத்துடன் விடிய, விடிய வீதிகளில் அமர்ந்திருந்தனர்.
தென்மலை, அச்சன்புதூர், ஆய்க்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சடைந்தனர். இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் பகுதி அனவன் குடியிருப்பு, டாணா உள்ளிட்ட இடங்களிலும் இரவு சுமார் 9.15 மணியளவில் வீடுகளில் அதிர்வு இருந்ததாம். இதனால், அனைவரும் பீதியில் திறந்த வெளியில் கூடினர். சில நொடிகள் நீடித்த நில அதிர்வால் டம்ப்ளர், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவை குலுங்கியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேபோல் கடையம் அருகிலுள்ள மந்தியூர் பள்ளிவாசல் தெருவில் நில அதிர்வால் ராஜா என்பவரது வீட்டில் கட்டிலில் படுத்திருந்த அவரது மகள் திடீரென கீழே விழுந்தாராம். இதையடுத்து அவர் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தாராம். அதே நேரத்தில் அருகிலுள்ள வீடுகளிலிருந்தவர்களும் அச்சத்தால் வீடுகளிலிருந்து வெளியேறி இரவு முழுவதும் தூங்காமல் திறந்த வெளியில் அமர்ந்திருந்தனர். கடையம் அருகே நரையப்புரம், அரியப்பபுரம் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.