நெல்லை அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா: நடிகர் ராஜேஷ் பங்கேற்பு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
 குழந்தைகள் தினத்தின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக நடிகர் ராஜேஷ் கலந்துகொண்டு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:
நாங்கள் படித்த காலத்தில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், நூலகத்துக்குச் செல்வோம். ஆனால் இப்போது விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதால், உங்களுடைய பெற்றோர்களிடம் கேட்டால், அவர்கள் இணையத்தில் தேடி பதில் சொல்லிவிடுகிறார்கள்.
நான் நடிகராக வேண்டும் என்ற இலக்கை என்னுடைய 11-ஆவது வயதில் நிர்ணயித்துவிட்டேன். அப்போது முதலே நடிகருக்கு தேவையான உடல்வாகை தயார் செய்வது உள்ளிட்ட பணிகளில் இறங்கிவிட்டேன்.
இன்றைய மாணவர்களுக்கு நிறைய நல்ல வாய்ப்புகள் உள்ளன.  9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும்போது மேடையில் ஏறி நடனமாடுகிறார்கள். கூச்சமின்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு மேடை பயம் என்பதே இல்லை என்றார்.
4 முதல் 5 வயதுக்குள்பட்டோருக்கான ஓவியப் போட்டியில் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி ஷோபனா லெட்சுமி பிரியா முதலிடத்தையும், வீ.கே.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர் பாலமுருகன் 2-ஆவது இடத்தையும், தூய சவேரியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த சூர்யா 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
6 மற்றும் 7 வயதுக்குள்பட்டோருக்கான ஓவியப் போட்டியில் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் அட்லின் பிரிஸியஸ் ஜோஃபின் முதலிடத்தையும்,  பேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி சிவசாந்தி 2-ஆவது இடத்தையும், ஹில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் அகிலன் 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
8 மற்றும் 9 வயதுக்குள்பட்டோருக்கான ஓவியப் போட்டியில் ஆமிர் ஜமால் பள்ளியின் ராம்குமார், ஹோலி ஏஞ்சல்ஸ் சர்வதேசப் பள்ளி மாணவர் முத்து சைலப்பன், சின்மயா வித்யாலயா மாணவி கிருத்திகா ஸ்ரீ ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். மாவட்ட காப்பாட்சியர் சத்தியவள்ளி வரவேற்றார்.  தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய  துணைத் தலைவர் மயன்.ரமேஷ் ராஜா சிறப்புரையாற்றினார். டீம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திருமலை முருகன், பொதிகை தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
கைத் தொழில் மற்றும் கைவினை கலைப்பொருள்கள் செய்வோர் நலச் சங்க செயலர் உமா மகேஷ்வரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com