திருநெல்வேலி பேட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான விநாடி-வினா போட்டியில் நாகர்கோவில் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் 2018 ஆம் ஆண்டுக்கான மாநில விநாடி-வினா போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி மண்டல அளவிலான போட்டிகள் 8 இடங்களில் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்-மாணவிகளுக்கான போட்டி பேட்டை மதிதா இந்துக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலர் (பொ) சிதம்பரம் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதியரசு, கதிர்வீச்சு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
மூன்று மாவட்டத்துக்குள்பட்ட 21 கல்லூரிகளைச் சேர்ந்த 156 மாணவர்- மாணவிகள் பங்கேற்றனர்.
நாகர்கோவில் மலங்கரா கத்தோலிக்க கல்லூரி மாணவர்கள் முதலிடத்தையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர்கள் இரண்டாமிடத்தையும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.