திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவியர் சேர்க்கைக்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 31ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 16) வெளியாக உள்ளன. இதனிடையே, இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவியர் சேர்க்கைக்கு அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இம்மாதம் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட மூன்று பாடப் பிரிவுகளில் 1112 இடங்கள் உள்ளன. பி.ஏ. பாடப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல், இதழியல், பி.எஸ்சி. பாடப் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினியியல், புவி அமைப்பியல் மற்றும் பி.காம். ஆகிய 14 பாடங்களுக்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சி.வே. மைதிலி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.ஏ., பி.எஸ்சி. மற்றும் பி.காம். ஆகிய இளநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இம்மாதம் 7ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இளநிலை பாடத்துக்கு 1112 இடங்கள் உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் இம்மாதம் 29 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு இம்மாதம் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பி.ஏ. ஆங்கிலம் பாடத்திற்கும், வரும் ஜூன் 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு பி.ஏ. தமிழ் மற்றும் பி.காம். ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், கணினியியல், புவி அமைப்பியல் ஆகிய பாடங்களுக்கும், 4ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு பி.எஸ்சி. வேதியியல், தாவரவியல், விலங்கியல், 5ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பி.ஏ. வரலாறு, பொருளாதாரம், 6 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பி.ஏ. சமூகவியல், பி.ஏ. இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றார் அவர்.