ஆட்சியர் அலுவலக குப்பைத் தொட்டியில் மனுவை வீசி போராட்டம் நடத்தியதாக இந்து மகா சபை கட்சியினர் 7 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்து மகா சபை கட்சி மாவட்டத் தலைவர் ராஜாபாண்டியன் தலைமையில் சிலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், ஆட்சியர் அலுவலக வாயில் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் மனுவைப் போட்டு முழக்கமிட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஆட்சியரின் காரை மறிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போராட்டம் நடத்தியவர்கள் கூறும்போது, திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் திருவண்ணாலை ஆதீனம் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மனுவை குப்பைத் தொட்டியில் போடும் போராட்டம் நடத்தினோம் என்றனர்.