வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாளை.யில் நவம்பர் 17, 18இல் ஹீமோபீலியா கருத்தரங்கு

ஹீமோ பீலியா குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2018, 11:55 pm

DIN


ஹீமோ பீலியா குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஹீமோபீலியா சங்கத்தின் திருநெல்வேலி கிளைச் செயலரும், மருத்துவருமான ஆர்.அன்புராஜன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
ஹீமோபீலியா என்பது மனித உடலில் ரத்தம் உறையாமல் போகும் நோயாகும். அடிபட்ட இடத்தில் அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது இயற்கை. ஆனால், ஹீமோபீலியா இருந்தால் ரத்தம் உறையாது. இந்நோயை முற்றிலும் குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. உலகில் 5 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1700 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 260 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மரபணுக் குறைபாடு காரணமாக உருவாகும் இந்த நோயால் ரத்தத்தை உறைய செய்யும் பிளாஸ்மா எனும் ரத்த நீர்ம காரணிகளின் செயல்பாடு குன்றுகிறது. ஹீமோபீலியாவை சில அறிகுறிகள் மூலம் நாம் அறிய முடியும். பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடியிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
குழந்தை தவழும் போது அல்லது நடக்க துவங்கும்போது மூட்டுகள் மற்றும் தசைகளில் ரத்த போக்கு ஏற்படும். உடல் வீக்கத்தோடு ஊதா நிறத்தில் கன்றி போயும் அல்லது கன்றி போகாமலும் இருக்கும். மூட்டு அல்லது தசைகள் வீக்கம் தன்னிச்சையாக ஏற்படும். சில வேளைகளில் மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்.
சர்வதேச அளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேர் மரணத்தையும், 70 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகளாகவும் உள்ளனர். ஹீமோபிலியாவை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், சரியான சிகிச்சை, மருத்துவர் வழிகாட்டுதல்கள், ஆலோசனை, சரியான பராமரிப்பு மூலம் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். ஹிமோபீலியா உறைக்காரணி என்று அழைக்கப்படும் நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தும் மருந்து மூலம் சிகிச்சை பெற முடியும்.
ஹீமோபீலியா விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இம் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஆலோசனைகளும், சுயசிகிச்சைக்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்படும் என்றார் அவர். பேட்டியின்போது, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் மு.முகம்மது சாதிக், தமிழ்த் துறைத் தலைவர் ச.மகாதேவன், ஹாரிஸ்டெக்சன், பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.