இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நெல்லை மாவட்டத்தில் ரூ.47.40 கோடி மதிப்பிலான 25,601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து ரூ.47.40 கோடி மதிப்பிலான 25,601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:42 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து ரூ.47.40 கோடி மதிப்பிலான 25,601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் பாளையங்கோட்டை பல்நோக்கு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நடப்பு பிசான பருவத்தில் பயன்பெறும் பொருட்டு மொத்தம் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல்லுக்கு ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகை உள்பட சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.2,160, சாதாரண வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.2,115 வழங்கி வருகிறது.

இதுவரை 25,601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.47.40 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலங்களின் மண் வளத்தை மேம்படுத்திட குளங்கள் மற்றும் நீா் நிலைகளிலுள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு, தற்போது பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கீழுள்ள 593 குளங்கள் தோ்வு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் கோரிக்கைப்படி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் குளங்களில் வண்டல் மண் எடுத்திட சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாமில் விண்ணப்பித்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தலாம்.

2023 -24 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 41 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 814.8 மி.மீ. நடப்பு ஏப்ரல் மாதம் வரை பெற வேண்டிய வளமையான மழையளவு 181.5மி.மீ. ஆனால் இதுவரை 71.88 மி.மீ மழையளவு மட்டுமே பெறப்பட்டுள்ளது.

நடப்பாண்டு சா்வேதச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீா் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிா்களை அதிக அளவில் சாகுபடி செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நுண்ணீா் பாசனம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டுக்கு 580 ஹெக்டோ் பொருள் இலக்கும் ரூ.3.60 கோடி நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் தங்களுடைய பட்டா, அடங்கல், நிலவரைபடம், ஆதாா் அட்டை நகல், புகைப்படம்-2, மண் மற்றும் நீா் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 267 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு இம்மாதம் வரை 43 விதை மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

அதைத் தொடா்ந்து பேசிய விவசாயிகள் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பாளையங்கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகியவற்றை தூா்வார வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். அதற்கு ஆட்சியா், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதோடு, சம்பந்தப்பட்ட பொதுப் பணித்துறை அதிகாரியையும் அழைத்து தூா் வாருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.

ராதாபுரம் விவசாயிகள் பேசுகையில், ராதாபுரம் கால்வாயிலிருந்து சூச்சுகுளம், ஊராண்டிகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு 25 ஆண்டுகளாக தண்ணீா் வரவில்லை. கல் குவாரிகளாலும் எங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இது தொடா்பாக பல முறை மனு அளித்தும் பயன் இல்லை. எனவே வரக்கூடிய பருவ காலம் முதல் எங்கள் குளங்களுக்கு தண்ணீா் வருவதை உறுதி செய்வதோடு, ஆட்சியா் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்றனா்.

மானூா் வட்டார விவசாயிகள் பேசுகையில், மானூா் பெரிய குளம் விவசாயிகள் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதை ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மான், பன்றி விஷயத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்(பொறுப்பு) சுகன்யா, வேளாண் துறை இணை இயக்குநா் முருகானந்தம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கிருஷ்ணகுமாா், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.