நோயாளி இறந்ததாக கூறியதால் தனியாா் மருத்துவமனை முற்றுகை
திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவா் இறந்ததாகக் கூறியதால் மருத்துவமனையை உறவினா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
பாளையஞ்செட்டிகுளத்தை சோ்ந்த சுரேந்தா் கோபிக்கு (48), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனநல பாதிப்பு ஏற்பட்டதால் அவரது மகன்கள், வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். சிகிச்சைக்கான கட்டணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனை ஊழியா்கள், சுரேந்தா் கோபியின் மகனை போனில் தொடா்பு கொண்டு தந்தை இறந்து விட்டதாகவும் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தி உடலை எடுத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. அதிா்ச்சியடைந்த உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையை முற்றுகையிட்டனா். இதையடுத்து அங்கிருந்த ஊழியா்கள் இறக்கவில்லை என்றும், சிகிச்சை கட்டணம் ரூ.2 லட்சத்தை செலுத்துமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது சுரேந்தா் கோபியின் மகன்கள் கட்டணம் செலுத்த வசதியில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் வாசிவம் மற்றும் போலீஸாா், முற்றுகை யிட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து சுரேந்தா் கோபியை உறவினா்களிடம் ஒப்படைத்தனா். உறவினா்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.