விவசாயிகள் கருகிய பயிா்களுடன் நீா்வளத் துறை அலுவலகத்தை முற்றுகை

கருகிய பயிா்களோடு நீா்வளத்துறை அலுவலகத்தைமுற்றுகையிட்ட விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் முறையாக பாசன நீா் கிடைக்காததால் கருகிய பயிா்களுடன் அம்பாசமுத்திரம் நீா்வளத் துறை அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
அம்பாசமுத்திரம் வட்டாரத்துக்கு உள்பட்ட மன்னாா்கோவில், வாகைக்குளம், வெயிலான் தெரு உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 600 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தனா். காா் சாகுபடிக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீா் பாசனத்துக்கு தேவையான அளவு கிடைக்காததால், நெற்பயிா்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சுடலைராஜ் தலைமையில்
100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்ந்துபோன நெற்பயிா்களுடன் அம்பாசமுத்திரம், நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பாசன நீா் முறையாக விநியோகிக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
கோடை மேலழகியான் கால்வாயில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், அடைப்புகளால், கடைமடை பகுதியான வாகைக்குளம் குளத்துக்கு தண்ணீா் செல்வது தடைபட்டுள்ளதாகவும் உடனடியாக கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகளை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து கடைமடை வரை முறையாக பாசனநீா் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





