தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான விளைநிலங்களை ஒட்டி காணப்படும் பார்த்தீனியம் நச்சு செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயப் பகுதிகளில் பரவிக் கிடக்கும் பார்த்தீனியம் செடிகளின் பூக்கள், பார்ப்பதற்கு வெண்மை நிறத்தில் அழகாக இருக்கும். ஆனால் நிலங்களை பாழாக்குவதில் கருவேல மரங்களை மிஞ்சி நிற்கக் கூடியவை. 3 முதல் 4 அடி ஆழத்துக்கு இந்த செடிகள் வேரூன்றும் தன்மை கொண்டவை.
ஒரு செடியின் பூக்கள் மூலம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் விதைகள் வரை உற்பத்தியாகின்றன. இவை முளைக்கத் தொடங்கியவுடன், மற்ற செடிகளை முளைக்க விடாமலும், வளர விடாமலும் தடுக்கிறது. பார்த்தீனியம் நச்சு செடிகள் பயிர்களை தடுப்பதோடு, மண்வளத்தையும் மலட்டுத்தன்மை ஆக்கிவிடுகிறது. செடியின் மேல் தோலில் காணப்படும் ஒருவித மயிர்கள், மனித உடலில் படும்போது அரிப்பு போன்ற உணர்வை ஏற்படுத்தி சொரி, கரப்பான் முதலான நோய்களை உருவாக்குகிறது என்ற புகாரும் உள்ளது.
இதுதவிர, செடியின் பூக்களிலுள்ள மகரந்த தூள்களை நுகரும் போது, நுரையீரலுக்கு செல்லும் குழாய்களை தாக்கி ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் காசநோயை உண்டாக்குவதாகவும், மூச்சு குழாய் சுருங்கி விரியும் தன்மை குறைந்து விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அத்திமரப்பட்டி, சாயர்புரம், முத்தையாபுரம், முள்ளக்காடு, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் பார்த்தீனியம் செடிகள் அதிகளவு காணப்படுவதாகவும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளைநிலங்களை இந்த செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்வந்து பார்த்தீனியம் செடிகளை அகற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காந்திய சேவா மன்ற நிறுவனர் என்.வி. ராஜேந்திரபூபதி கூறியது: பார்த்தீனியம் செடிகளால் மனிதர்களும், கால்நடைகளும், விவசாய பயிர்களும் அதிகளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது. பார்த்தீனியம் செடிகளை கால்நடைகள் உண்பதன் மூலம் அவற்றுக்கு வாய்ப்புண் மற்றும் குடல்புண் ஏற்படுகிறது.
பார்த்தீனியம் நச்சு செடிகளை உடனே முற்றிலும் அழித்து விட முடியாது. அது மீண்டும் மீண்டும் முளைத்து வளரக்கூடியது ஆகும். அரசுடன் பொதுமக்களின் பங்கேற்பும் அதற்கு அவசியம் இருக்க வேண்டும். குறிப்பாக, இதுச ம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதல் பணியாக இருக்க வேண்டும். இந்த நச்சு செடிகளை பூப்பதற்கு முன்பு கையுறை அணிந்து, வேருடன் அகற்றி தீயிட்டு அழிக்கலாம். மற்றொரு வழியின்படி, 10 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ உப்பு கரைசலை பூப்பிடித்த செடியின் மீது தெளித்தும் அழிக்கலாம். ஆனால் பூப்பதற்கு முன்பே அழித்து விடுவது சிறந்த வழியாகும்.
மாவட்ட நிர்வாகம், சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட்டாமல் மட்டுமே பார்த்தீனியம் செடிகளை முற்றிலுமாக அழிக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் மண் வளத்தைக் கெடுக்கும் பார்த்தீனியம் செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.