தேசப்பற்றுதான் தேவை என்றார் முன்னாள் எம்எல்ஏ. பழ.கருப்பையா.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து சாத்தான்குளத்தில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. நகர திமுக செயலர் மகா. இளங்கோ தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ஆ.க.வேணுகோபால், மார்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அ.பாலகிருஷ்ணன், கொ. பாலசுந்தரகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக செயலர் ஏ.எஸ். ஜோசப் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா பேசியதாவது: வீட்டுக்குதான் மதம் தேவை. நாட்டுக்கு மதம் தேவையில்லை. நாட்டுப்பற்று இருந்தால் போதுமானது. மத்தியிலும் மாநிலத்திலும் மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்து வருகின்றனர். ஆகவே மாநிலத்தில் ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல் தலைமையிலும் ஆட்சி அமைய மதச்சார்ப்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார் அவர்.
உடன்குடி ஒன்றிய திமுக செயலர் பாலசிங், முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி இ. கெங்கை ஆதித்தன், மாவட்ட பிரதிநிதி இ. ஸ்டேன்லி, ஒன்றிய பொருளாளர் எஸ். வேல்துரை, நகரப் பொருளாளர் சந்திரன், ஒன்றிய மருத்துவப் பிரிவு அமைப்பாளர் செல்வராஜ் மதுரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட திமுக பிரதிநிதி லெ. சரவணன் நன்றி கூறினார்.