பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்திய வணிகர்கள் அழிந்து போகும் நிலை உருவாகும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
ஜனநாயகமா, பாசிசமா என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தல் இது. தமிழகத்தில் நான்கு பக்கமும் ஆபத்து சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் மதச்சார்பற்ற தன்மையை, ஜனநாயகத்தை காப்பாற்ற வாருங்கள். அரசியல் விழிப்புணர்வு பெற்ற நகரங்களில் தமிழகத்தில் கோவில்பட்டி முக்கியமானது.
காஷ்மீர் பிரச்னையில் நரேந்திர மோடி எடுக்கும் முடிவு நெருப்போடு விளையாடுவதற்கு சமம். எந்த அடிப்படையில் அரசியல் சட்டப்பிரிவு 370ஆவது பிரிவை நீக்குவோம் என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டீர்கள்?காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது எனக் கூற அமித்ஷா யார்? இது விபரீதத்தில் போய் முடியும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெரிய வணிக வளாகங்களை இந்தியாவுக்குள் கொண்டு வரப்போகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்ல பெரிய வணிகக் குழுமங்களும் வரும். இந்திய வணிகர்கள் அழிந்து போகும் நிலை உருவாகும். ஜனநாயகத்தை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
முன்னதாக சுப. வீரபாண்டியன், மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ்.ரமேஷ்(மதிமுக), அழகுமுத்துப்பாண்டியன்(சிபிஐ), அர்ச்சுணன்(சிபிஎம்), கதிரேசன்(விசிக), வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் உள்பட கூட்டணிக் கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.