கோவில்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக முதியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாலாட்டின்புத்தூரையடுத்த குமரெட்டியபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பாளரும், தேர்தல் பிரிவு நிலையான கண்காணிப்பு குழு அதிகாரியுமான பாலசுந்தரம் தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை குமரெட்டியபுரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குமரெட்டியபுரம் கீழத்தெருவில் நின்று கொண்டிருந்த பெருமாள் மகன் முத்தையாவை (60) பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திமுக பிரமுகரான அவர், அப்பகுதி பொது மக்களுக்கு ரூ.300 வீதம் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து, நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து, முத்தையாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.9900ஐ பறிமுதல் செய்தனர்.