சிறுபான்மையினர் பாதுகாப்பை அரசிடம் வலியுறுத்துவேன்: தமிழிசை செளந்தரராஜன்
By DIN | Published On : 04th August 2019 12:53 AM | Last Updated : 04th August 2019 12:53 AM | அ+அ அ- |

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து தமிழக அரசிடம் வலியுறுத்துவேன் என்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
திருச்செந்தூர் அமலிநகரில் மீன்பிடித் தொழிலில் கிடைக்கும் வருவாயில் ஊர்நல கமிட்டிக்கு வரி வழங்குவது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த ஜூலை 25-ம் தேதி ஏற்பட்ட தகராறில் அமலிநகரைச் சேர்ந்த மோசஸ், கனிஷ்டன், கிறிஸ்பன், உபால்ஸ்டன் ஆகியோர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் பாஜக-வில் இணைந்ததாலேயே தாக்கப்பட்டதாக கூறி, அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை திருச்செந்தூர் வந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
அமலிநகர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் பலர் தங்களை பாஜக-வில் இணைத்துக் கொண்டனர். அவர்கள் கடந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், இப்போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதற்குக் காரணமானவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது.
சிறுபான்மை மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து பாஜகவில் இணைகின்றனர். அதை பாதுகாப்பாகவும் உணர்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய வேண்டும். அவர்களிடம் கட்டாயப்படுத்தி வரிவசூல் செய்யக்கூடாது. பாஜக அவர்களுக்கு அரணாக இருக்கும். காவல் துறை நியாயமாக, நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களை பாரபட்சமாக நடத்த முடியாது என்பதையும், அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதையும் தமிழக அரசிடம் வலியுறுத்துவேன்.
நான் அமலிநகருக்குள் செல்வதை யாரும் தடுக்க முடியாது. இன்னும் இருதினங்களில் அமலிநகருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவேன் என்றார்.
அப்போது, பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி, மாவட்ட செயலர் இரா. சிவமுருகன் ஆதித்தன், மகளிரணி மாவட்ட பொதுச் செயலர் கு. நெல்லையம்மாள், திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார், நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெரால்டு, நகர மீனவரணி தலைவர் நெப்போலியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஐயப்பன், நகர வர்த்தக அணித் தலைவர் பிருத்திவிராஜ், நகர இளைஞரணி தலைவர் முத்து, வார்டு செயலர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...