ரெட்டிங்டன் பவுண்டேசன் சார்பில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புத்தகப்பைகள் வழங்கும் விழா மாநகராட்சி கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு பள்ளி மாணவர், மாணவிகளுக்கு புத்தகப்பைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில் நியு விங்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயின்று பட்டப்படிப்பு பயிலும் வரை தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரெட்டிங்டன் பவுண்டேசன் சார்பில் 156 பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.
துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, ரெட்டிங்டன் பவுண்டேசன் தலைவர் முத்துக்குமாரசாமி, செயலர் லட்சுமிநரசிம்மன், மண்டலத் தலைவர் சண்முகவடிவு, மாநகராட்சி நல அலுவலர் வினோத்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.