தூத்துக்குடி, கடம்பூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 22nd March 2019 06:59 AM | Last Updated : 22nd March 2019 06:59 AM | அ+அ அ- |

தூத்துக்குடி குருக்காட்டூர், கடம்பூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்ட முகாம் குருக்காட்டுர் கிராமத்தில் 7 நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு பயிலும் 48 மாணவர், மாணவிகள் பங்கேற்று களப்பணியில் ஈடுபட்டனர். முகாமில், டெங்கு மற்றும் காசநோய் விழிப்புணர்வு, பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் மற்றும் யோகா வகுப்புகள் நடத்துதல், கிராமம், பள்ளி வளாகங்களை தூய்மை பணி மேற்கொள்ளுதல், சுகாதார விழிப்புணர்வு, கெண்டை மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பு பயிற்சி, மதிப்பூட்டிய மீன் உணவுப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி, இலவச கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள், வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனித சங்கிலி உள்ளிட்டவை நடைபெற்றன.
மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் வேலாயுதம் சான்றிதழ் வழங்கினார். இதில், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பால ஹரிஹரமோகன், ஊராட்சி அலுவலர் மா. சண்முகசுந்தரம், திட்ட அலுவலர் த. ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: மக்களவைத் தேர்தலையொட்டி கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஜெயகுமார் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் திரவியம் முன்னிலை வகித்தார். பேரணியை துணை வட்டாட்சியர் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்குரிமை நமது அடிப்படை உரிமை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பேரணியில் விநியோகம் செய்யப்பட்டது. குறுவட்ட ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ், கிராம உதவியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...