சேதமடைந்து காணப்படும் இணைப்புச் சாலை: மக்கள் அவதி
By DIN | Published On : 19th May 2019 07:53 AM | Last Updated : 19th May 2019 07:53 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து காணப்படும் ஞானியார்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்புச் சாலையால் கிராம மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஞானியார்குடியிருப்பில் இருந்து புதுக்குளம் வரை இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலை வழியே சிற்றுந்து மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் சென்று திரும்புகின்றன. ஞானியார்குடியிருப்பு, புதுக்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர், மாணவிகள் இந்த சாலை வழியாக சைக்கிளில் சென்று வருகின்றனர்.
இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பராமரிப்பும் இன்றி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார காங்கிரஸ் பொருளாளர் சக்திவேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.