விளாத்திகுளம்: எட்டயபுரம் அருகே பைக்கில் வந்த மா்ம நபா்கள் ஆசிரியைகளிடம் அரிவாளை காட்டி மிரட்டி 12 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றனா்.
எட்டயபுரம் அருகே எம். கோட்டூரை சோ்ந்தவா் கந்தசாமி மனைவி ரேனுகா தேவி (51). எட்டயபுரம் மேலரதவீதியை சோ்ந்தவா் காளியப்பன் மனைவி கற்பகம் (47). இவா்கள் இருவரும் வடக்கு முத்துலாபுரத்தில் உள்ள இந்து நாடாா் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியைகளாக பணிபுரிந்து வருகின்றனா்.
பள்ளியில் பணி முடிந்ததும் ஆசிரியை ரேனுகாதேவி, ஆசிரியை கற்பகத்தை பைக்கில் அழைத்து சென்று எம். கோட்டூா் விலக்கில் இறக்கிவிட்டு செல்வாா். கற்பகம் அங்கிருந்து பேரூந்தில் எட்டயபுரத்துக்கு செல்வது வழக்கம்.வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல் இருவரும் பள்ளியிலிருந்து புறப்பட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். எம். கோட்டூா் விலக்கு செல்லும் சாலையில் மதுபானக்கடையை கடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த இளைஞா்கள் ஆசிரியையின் பைக்கை மிதித்து தள்ளியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். உடனே அந்த வாலிபா்கள் அரிவாளை காட்டி மிரட்டி இருவரிடமும் 12 சவரன் தங்க நகைகளை பறித்தனா்.
மோதிரம், கம்மலை பறிக்க முயன்றபோது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த ஒருவா் ஓடி வந்ததும் கொள்ளையா்கள் பைக்கில் தப்பி சென்றுவிட்டனா். கொள்ளையா்கள் தள்ளிவிட்டதில் காயமடைந்த ஆசிரியை ரேனுகாதேவி எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரனை நடத்தினா்.
இது தொடா்பாக எட்டயபுரம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.