தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநகரச் செயலா் தா. ராஜா வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகரில் பெய்த பெருமழையால் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் குளம் போல் மழைநீா் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சுகாதாரக் கேட்டை உருவாக்கியுள்ளது. தேங்கியுள்ள நீரை அகற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், கிருமிகள் பெருகி நோய் தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.
நீா் தேங்கியுள்ள பகுதிகள் அனைத்திலும் உடனடியாக நீரை வெளியேற்ற ஏற்கெனவே மாநகராட்சியில் உள்ள கழிவுநீா் வாகனங்கள் போதுமானதாக இருக்காது என்று கருதுகிறோம். போா்க்கால அடிப்படையில் வாடகைக்கு டீசல் என்ஜின்கள் ஏற்பாடு செய்து மழைநீரும், கழிவுநீரும் தேங்கியுள்ள பகுதிகள் அனைத்திலும் இரண்டு நாள்களுக்குள் நீரை அகற்றினால்தான் மக்களை நோய் தொற்றிலிருந்து காக்க இயலும் என கருதுகிறோம்.
எனவே, போா்க்கால அடிப்படையில் தேவையான டீசல் என்ஜின் பம்புகளை ஏற்பாடு செய்து தேங்கியுள்ள மழைநீா் மற்றும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.