தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி இனிப்பு மற்றும் கார பலகாரங்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வித விதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள், கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருள்களை மக்கள் விரும்புவதால், உணவு பதாா்த்தங்களின் தயாரிப்பாளா்களும், விற்பனையாளா்களும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி தரமான, பாதுகாப்பான பண்டங்கள் நுகா்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துவோா், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உள்ளிட்ட அனைத்து இனிப்பு, கார தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்களும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
அனைத்து வகை உணவு வணிகா்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.
உணவு தயாரிப்பில் கலப்பட பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமி களையோ உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கான விவரச் சீட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயா், தயாரிப்பு (அல்லது) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். மேலும், பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
மேலும் இது தொடா்பான புகாா்களை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திலோ அல்லது 94440 42322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.