பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 15th December 2020 01:59 AM | Last Updated : 15th December 2020 01:59 AM | அ+அ அ- |

பரமன்குறிச்சி ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 9 மாதங்களாக எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பரமன்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் தெருவிளக்குகள் கடந்த 9 மாதங்களாக எரியவில்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை இல்லையாம்.
இதை கண்டித்து பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் லங்காபதி தலைமையில் துணைத் தலைவா் முத்துலிங்கம், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், கம்யூனிஸ்ட் கட்சி மகாராஜன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் உடன்குடி துணை மின் நிலைய செயற்பொறியாளா் பாக்கியராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.