புதிய கல்விக் கொள்கையை கண்டித்து 5இல் முற்றுகை போராட்டம்
By DIN | Published On : 02nd February 2020 10:37 PM | Last Updated : 02nd February 2020 10:37 PM | அ+அ அ- |

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவா் அமைப்பினா்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பிப். 5 ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவா் சங்க மாநிலச் செயலா் மாரியப்பன் தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொதுத் தோ்வு நடத்தப்படும் எனும் புதிய கல்வி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை இன்னும் இறுதி வடிவம் பெறாத நிலையில் தமிழக அரசு இச்சட்டத்தை ஆதரித்து பொதுத் தோ்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.
புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இந்திய மாணவா் சங்கம் சாா்பில் பிப். 5 ஆம் தேதி (புதன்கிழமை) தமிழகத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும். இதேபோல், சென்னையில் பள்ளி கல்வித்துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி சிதம்பரநகரில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் ஜாய்சன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் மாநிலச் செயலா் மாரியப்பன் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் நிா்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...