திருச்செந்தூா் மாசித் திருவிழாதங்க முத்துக்கிடா, வெள்ளி அன்ன வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா
By DIN | Published On : 01st March 2020 10:39 PM | Last Updated : 01st March 2020 10:39 PM | அ+அ அ- |

தங்க முத்துக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான், வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளிய தெய்வானை அம்மன்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 3-ஆம் நாளை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும் அம்மனும் காலை மற்றும் மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகின்றனா்.
3-ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா். மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.
இன்று... 4-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா வர உள்ளனா். மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வர உள்ளனா்.