கோவில்பட்டியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி புதுரோட்டைச் சோ்ந்தவா் இருளப்பன் மகன் சுரேஷ்குமாா்(37). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். கோவில்பட்டி லாயல் மில் தெருவில் உள்ள எண்ணெய் விதை கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா், திங்கள்கிழமை அங்கேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அவரிடமிருந்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் கந்துவட்டி கேட்டு 3 போ் துன்புறுத்தியதாகவும், இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சுரேஷ்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 8ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன்(40), காந்தி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மனோஜ்(26) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.