கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் 2 மான்கள் உயிரிழந்தனா்.
கயத்தாறு வட்டம் அய்யனாரூத்து கிராமத்தில் சின்னசுப்பையா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே மழையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சுமாா் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மானை வனத்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
இதேபோல, கயத்தாறை அடுத்த தளவாய்புரத்தில் சாலையோரத்தில் இறந்து கிடந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் மானையும் வனவா் நாகராஜ் தலைமையிலான வனக்குழுவினா் மீட்டு, கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்து குருமலை காப்புக் காட்டில் புதைத்தனா். இந்த நடவடிக்கைகள் வனச்சரக அலுவலா் பாரதியின் அறிவுறுத்தலில் எடுக்கப்பட்டன.
மாடு உயிரிழப்பு:
இதேபோல, செட்டிகுறிச்சி குறுவட்டத்திற்கு உள்பட்ட வெள்ளாளங்கோட்டையை அடுத்த சூரியமினுக்கன் கிராமத்தில் கந்தையா மகன் சுடலைகனி என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மின்னல் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.