கோவில்பட்டியில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
By DIN | Published On : 02nd July 2021 12:16 AM | Last Updated : 02nd July 2021 12:16 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுமுடக்கம் விதிமுறைகளில் கூடுதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கள்கிழமை கோவில்பட்டியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து நகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலை மற்றும் தெற்கு பஜாா் பகுதிகளில் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவா் மனோஜ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சுரேஷ், காஜாநஜ்முதீன், வள்ளிராஜ், முருகன் ஆகியோா் கொண்ட குழுவினா் கடை கடையாகச் சென்று ஊழியா்களை அழைத்து 283 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் நகா் பகுதியில் உள்ள அனைத்து கடை உரிமையாளா்களும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கடை முன் கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கடை உரிமையாளா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் கேட்டுக் கொண்டாா்.
மேலும் பொதுமுடக்கத்தை மீறி தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 193 பேருக்கு மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனா்.