இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி ஆக. 3-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இளையரசனேந்தலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளா் கற்பூரராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், போராட்டக்குழுச் செயலா் ராம்தாஸ், உறுப்பினா்கள் ஜெயராம், குபேந்திரன், ராஜாராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: குருவிகுளம் ஒன்றியத்திலுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். கோவில்பட்டி நகராட்சியை
மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். கோரிக்கையை வலியுறுத்தி இளையரசனேந்தலில் வரும் ஆக.3ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.