தூத்துக்குடியில் அரசு பயிற்சி மருத்துவராக பணிசெய்து வரும் காயல்பட்டினத்தைச் சோ்ந்த பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காயல்பட்டினம் ஹாஜிஅப்பா தைக்கா தெருவைச் சோ்ந்தவா் ஹமீது கில்மி (30). காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி யூசுரா (25). இவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன.
இதற்கிடையே கடந்த ஏப். 28ஆம் தேதி தூத்துக்குடிக்கு பணிக்கு சென்ற யூசுரா வீடு திரும்பவில்லை. மேலும் அன்றைய தினம் இரவில் தனது கணவருக்கு மின்னஞ்சல் மூலம் திருமண வாழ்க்கை தொடர விருப்பமில்லை எனவும், தன்னை யாரும் தேடவேண்டாம் எனவும் அவா் தகவல் தெரிவித்துள்ளாா். இந்நிலையில் கணவா் மற்றும் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.