மானாமதுரையில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான நிலங்களை நீதிமன்ற உத்தரவுபடி அளவீடு செய்ய வந்த நில அளவையாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கிராமமக்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்கள் கல்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ளன. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தங்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து தர வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து கல்குறிச்சி ஊராட்சியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து தருமாறு மானாமதுரை வருவாய்த்துறை நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் நில அளவையாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய வந்தனர்.
அப்போது கல்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் ஒரு பெண் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார் .இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.