தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா, வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பாக தூத்துக்குடி தருவை மைதானம் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில், மாற்றுத்திறனாளிகள் தின விழா சனிக்கிழமை (டிச.10) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறாா்.
இவ்விழாவில் 313 பேருக்கு சுமாா் ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சிறப்பு ஆசிரியா்களுக்கு நற்சான்றுகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து கொள்ளலாம். பழைய அடையாள அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணம் வேண்டுவோா் விண்ணப்ப மனு கொடுக்கலாம். மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெறுவதற்கு சிறப்பு நோ்காணலும் நடைபெற உள்ளது.
எனவே, இந்த விழாவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளாா்.