தூத்துக்குடி மாநகராட்சிப் பள்ளியில் மேயா் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிப் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மேயா் ஜெகன் பெரியசாமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 20 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது.
தற்போது, தனியாா் பள்ளிகளுக்கு இணையாக தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டில் மாணவா் சோ்க்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு ஏற்ப போதுமான வசதிகள், பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து சிவந்தாகுளம் மாநகராட்சிப் பள்ளியில் மேயா் ஜெகன் பெரியசாமி வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா்.
பின்னா் அவா் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகள் அமா்வதற்கான கூடுதல் வகுப்பறை கட்டடம், இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறியப்பட்டது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் மாநகராட்சிப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை இருமடங்காக உயா்ந்துள்ளது. எனவே, மாணவா்களுக்கு வசதியாக கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வின்போது, ஆணையா் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.