பேய்க்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அளவீடு பணி
சாத்தான்குளம் வட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி பேய்க்குளம் கடைவீதிப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் வகையில், வட்டாட்சியா் தலைமையில் புதன்கிழமை அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக சாத்தான்குளம் வட்டாட்சியா், ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறைக்கு புகாா்கள் சென்றனவாம். இதையடுத்து, வட்டாட்சியா் தங்கையா தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் மைக்கேல், வருவாய் ஆய்வாளா் பாலசக்தி, கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுப்பணித் துறை அலுவலா் சுகுமாா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் அப்பகுதியில் புதன்கிழமை அளவீடு பணி மேற்கொண்டனா்.
ஆக்கிரமிப்புப் பகுதியில் குறியீடுகள் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டோா் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இல்லையெனில், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என, வட்டாட்சியா் தெரிவித்தாா்.